Tuesday 7 February 2012

நம்மை பிரித்தாள மீண்டும் ஒரு தீவிர முயற்சி

நம்மை பிரித்தாள மீண்டும் ஒரு தீவிர முயற்சி (28.06.11 அன்று முகநூலில் பதிந்தது)

தந்தை பெரியாரின் கருத்தாழமுள்ள தொடர் பிரச்சாரத்தின் விளைவாக ஒரு மாபெரும் சமூக புரட்சி அமைதியாக நம் தமிழகத்தில் மட்டும் நடந்தது.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் இருக்கும் மக்களையும், தமிழக மக்களையும் தனித்து வேறுபடுத்திகாட்டும் அடையாளம் அது. இந்தியாவிலேயே அந்த உயர்வான நாகரீக மாறுதலை அடைந்து தமிழகம் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ளவர்கள் பலருக்கு, இந்த வித்தியாசம் நம்மை உயர்வானவர்களாக காட்டுகிறது. ஆம். அந்த புரட்சி, வித்தியாசம் என்பது,  இந்தியாவில் ஜாதி பெயரை தங்களின் பெயருக்கு பின்னால் போடாத ஒரே மக்கள் தமிழக மக்களே.



உலகில் எங்கும் இல்லாத பிற்போக்குத்தனமான, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி  அமைப்பை, தொடர்ந்து காப்பாற்றும் வகையில், அதை பல மாநிலங்களில் இன்றும் தங்களது ஜாதி பெயரை பின்னால் சேர்த்துகொள்ளுகின்றனர். ஆனால் நாம் அவ்வாறு  போடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் சொல்லபோனால், அவ்வாறு போடுவதை இழிவாக கருதும் சமூகமாக மாறிவிட்டோம்.  இந்த உயர்நிலை எண்ணம், நம்மை பிற மாநிலத்தில் உள்ள பிற்போக்குவாதிகளிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. இது தந்தை பெரியாரால் ஏற்படுத்தப்பட்ட உணர்வின் விளைவு.


சமீபகாலமாக, மாநில கட்சிகளின் வலிமையை குறைப்பதற்கும், மாநில கட்சிகளின் சாதனைகளை குழி தோண்டி புதைப்பதற்கும், தேசிய கட்சிகள் மற்றும் ஆதிக்க மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி மக்களும் சேர்ந்து திட்டமிட்டு செயலாற்றிவருகின்றனர். இது பல மாநிலங்களில் நடந்தாலும், தமிழகம் அவர்களுக்கு ஒரு சவாலான இடம். ஏனென்றால், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தேசிய கட்சிகள் வெற்றிபெற முடியவில்லை, அவைகளின் வளர்ச்சி முடங்கிவிட்டது.  இவற்றை சரி செய்யமுயலும் தேசிய கட்சிகள், பல முனைகளில் இருந்தும் தங்களது சாமர்த்தியமான நடவடிக்கைகளை முடுக்கி உள்ளது. 


இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழகத்தை பொருத்தவரை, திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளை முடுக்க, அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், கொள்கை ரீதியாக அவற்றை செயல் இழக்க செய்ய சதிகள் நடைபெறுகின்றன. திராவிட இயக்கத்தின் சாதனைகள் பல இருந்தாலும், அவற்றில் முதன்மையானதும், நிருபிக்கபட்டதுமானது, நான் மேற்சொன்ன சாதனை. இந்த சாதனையை உடைக்க, திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் வெற்றியை பாழ் செய்ய, சமூக நலனை பற்றிகூட கவலைப்படாமல், திராவிட இயக்கங்களை ஒழிக்கிறேன் பேர்வழியென அதன் சமூக நல கொள்கைகளை தகர்க்க முயலுகின்றார்கள்.

இந்நிலையில், சில ஆண்டுகளாக  ஒரு குறிப்பிட்ட ஜாதி பிரிவை சேர்ந்தவர்கள், இந்த வட்டார -----சங்கம், அந்த பகுதி .............பேரவை என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்துவதும், அதற்காக செய்யப்படும் விளம்பரங்களில், அனைவரது பெயர்களுக்கு பின்னாலும் ஜாதி பெயர் இணைத்து போடபட்டுவருகிறது.  படித்த இளைஞர்களும் இவ்வாறு ஜாதி பெயர்களை போட்டுக்கொள்ளுவது, அதிலும் சென்னை மாநகரில்....புரியவில்லை....எதோ நடக்கிறது. அந்த ஜாதி பிரிவினர்  செய்வதைப்போல, சமீபகாலமாக மற்றொரு ஜாதி பிரிவயை சேர்ந்தவர்களும், அதே போல செயல்பட தொடங்கியுள்ளனர். இது இப்படி தொடர்ந்தால்.....அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும் விரைவில், பழைய பிற்போக்குத்தனமான மனநிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.

இதை தவிர்க்க, அனைத்து ஜாதி பிரிவை சேர்ந்த படித்த, முற்போக்கு என்னம்கொண்ட, சமூக நலனில் அக்கறைகொண்ட, நல்லவர்கள், பெரியவர்கள், முதன்மையானவர்கள், முறையே கண்டித்து, அறிவுரை கூறி தடுத்திட முயலவேண்டும்.


உண்மையான திராவிட இயக்க அரசியல் தலைவர்கள், உடனடியாக தீவிரமாக செயல்பட வேண்டிய நேரமிது. பெரியாரிய கொள்கைகளை மீண்டும் மக்களிடம் எடுத்து சென்று பரப்ப வேண்டிய அவசர கடமை நம் எல்லோருக்கும் உள்ளது. 

ஜாதிகளற்ற சமூகத்தை அமைக்க பாடுபடுவோம். 

- திராவிடப்புரட்சி           

No comments:

Post a Comment